பேருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் புதிய யோசனை

26.09.2021 05:11:50

நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய வர்ண வலையங்களாக வகைப்படுத்தி பேருந்து சேவைகளை முன்னெடுப்பது தொடர்பிலான யோசனை ஒன்றை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது. 

அதன் தலைவர் கெமுனு விஜேரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். 

கொவிட் தொற்று தீவிர பாதிப்புள்ள மாகாணங்கள் சிவப்பு நிறத்திலும், குறைவான நோயாளர்கள் கண்டறியப்படும் மாகாணங்கள் மஞ்சள் நிறத்திலும் அடையாளப்படுத்தப்படும். 

அத்துடன், கொவிட் நோயாளர்கள் இல்லாத மாகாணங்கள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட வேண்டும். 

இதன்படி, சிவப்பு நிறத்தில் காட்டப்படும் மாகாணங்களில் பேருந்துகளின் ஆசன எண்ணிக்கையில், 50 சதவீதமானோரும், மஞ்சள் வலையத்தில் பேருந்துகளின் ஆசன எண்ணிக்கையில் 100 சதவீதமான பயணிகளும் பயணிக்க முடியும்.

அதேநேரம் பச்சை வலையத்தில் உள்ள மாகாணங்களில் பேருந்துகளில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை அனுமதிப்பதற்கான நடைமுறை அடங்கிய யோசனையினை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.