யாழில் பொலிஸாரை மீறி சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு

07.02.2024 14:44:54

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை பளையிலிருந்து சட்டவிரோதமான முறையில் மணலை ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் புத்தூர் பகுதியில் வைத்து பொலிசாரால் இடைமறிக்கப்பட்டது.

வாகனம் மறிக்கப்பட்ட போது பொலிசாரை உதாசீனம் செய்த சாரதி வேகமாக சென்று புத்தூர் பிரதான வீதி ஊடாக சிறுப்பிட்டி, ஆவரங்கால் உள்ளிட்ட பல பாதையில் ஊடாக சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக வேகமாக தப்பிச் சென்றுள்ளார்.

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திச் சென்று பொலிசார், பாடசாலை மாணவர்கள் பயணித்துக் கொண்டிருந்த புத்தூர் பிரதான வீதியை அடுத்து மக்கள் நடமாட்டம் குறைந்த வீரவாணி எனும் பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தி குறித்த டிப்பர் ரக வாகனத்தை தடம்புரளச் செய்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான டிப்பர் ரக வாகனத்தின் டீசல் தாங்கி மற்றும் டயர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் சாரதி உட்பட இருவர் வாகனத்துடன் சேர்ந்து தடம் புரண்டனர்.

இவர்களை கடமையிலிருந்த காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்பு பொலிசார் கைது செய்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

குறித்த டிப்பர் ரக வாகனம் பொலிசார் துரத்தி சென்ற போது இடைவழியே ஏற்றி வந்த மணலை கொட்டியவாறு சென்றதுடன் மீதமிருந்த மணல் வாகனம் தடம் புரண்ட இடத்திலேயே கொட்டிக் கிடந்தது.

தடம் புரண்ட வாகனத்தை கனரக வாகனத்தின் உதவியுடன் தூக்கிய பொலிசார், வீதியில் இருந்த மணலையும் அப்புறப்படுத்தினர்.

இதன்போது பளைப்பகுதியைச் சேர்ந்த குறித்த டிப்பரக வாகனத்தின் உரிமையாளர் எனக் கருதப்படும் இளைஞர் ஒருவரையும் அவ்விடத்தில் வைத்து காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பொலிசார் கைது செய்தனர்.

பாடசாலை மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த குறித்த பகுதியில் டிப்பர் ரக வாகனம் சட்டவிரோத மணலுடன் வேகமாக பயணம் செய்வதாக காங்கேசன்துறை விசேட குற்றத்திடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலினை அடுத்து குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதில் கைதான மூவரும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.