சீனாவின் பொருத்து வீட்டுத் திட்டம் வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம்!

09.07.2024 08:10:28

சீன அரசின் பொருத்து வீட்டுத் திட்டம் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் எனவும் நிரந்தர வீட்டு திட்டத்தினை மீனவர்களுக்கு வழங்குமாறும் யாழ் சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். ஆகவே சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல. நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம்.

சூறாவளி காற்றினால் குறித்த வீடுகள் அழியக் கூடும். இயற்கை அனர்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.  ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீட்டு திட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம்.

எமது கடற்றொழிலாளர்கள் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான  பல நெருக்கடியான சூழலிலும் மீனவ தொழிலை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றோம்” இவ்வாறு  கனகசபை ரவீந்திரன் மேலும் தெரிவித்தார்.