கமல் மீது வழக்குப்பதிவு - சுயேட்சை வேட்பாளர் புகார்

04.04.2021 10:45:49

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார் என்பவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்நகர், காட்டூர் பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
 

அந்த பிரசாரத்தில் ராமர் மற்றும் அம்மன் வேடமிட்ட 2 பேர் கலந்து கொண்டு கையில் கமல்ஹாசனின் கட்சி பேனர்களை வைத்திருந்தனர்.

 

அப்போது பேசிய கமல்ஹாசன் ராமர் வேடமிட்டவரை நோக்கி இந்த கடவுள், அந்த கடவுள் எல்லாம் நமது கடவுள் தான். இந்த கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என சொல்லியிருக்கிறார்.

எனவே இந்து கடவுள்களை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

அதன் பேரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட 3 பேர் மீது மதத்திற்கு இடையே பிரிவினை ஏற்படுத்துதல், தேர்தலை பயன்படுத்தி மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.