ஆட்சி அதிகாரம் இல்லாமல் சேவை செய்ய முன்வாருங்கள்

07.12.2022 00:31:13

முடிந்தால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 42 ஆவது கட்டமாக பாடசாலை பேருந்து வண்டியொன்று இன்று(06) தெரணியகல சிறி சமன் கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

ஆட்சி அதிகாரமின்றி சேவை செய்ய முன்வாருங்கள்

“பிரபஞ்சம், மூச்சு போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது சஜித் பிரேமதாசவிற்கு பொருட்களை பகிர்ந்தளிக்க மட்டுமே தெரியும் என்றும் அதற்கு மேல் எதுவும் தெரியாது என இந்தச் சமூகத்தின் ஒரு சிறு பிரிவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கிண்டல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஆட்சியதிகாரமின்றி சேவை செய்ய முன்வருமாறு சவால் விடுக்கிறேன். 

எவ்வாறாயினும், இலங்கையின் 74 வருட அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி ஆற்றிய பாரம்பரிய வகிபாகத்திற்கு அப்பால் தற்போதைய எதிர்க்கட்சி வேறுபட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

கல்வி சார்ந்த அணுகலில் பாரபட்சம் நிலவக்கூடாது.

அரசாங்க நிதி

நாற்பத்தி இரண்டு பேருந்துகளை வழங்கியுள்ளோம். அவற்றிற்கு அரசாங்க நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை” - என்றார்.