பாத யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் மரணம்

08.11.2022 15:43:50

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி-காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை (பாரத் ஜோடோ யாத்திரை) நடத்திவருகிறார். இந்த யாத்திரையின் 62ஆவது நாள் (திங்கள்கிழமை- நவ.7) யாத்திரையின்போது காங்கிரஸ் மூத்தத் தலைவர் கிருஷ்ண குமார் பாண்டேவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார். இது பாரத் ஜோடோ யாத்ரீகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ண குமார் பாண்டேவின்மரணத்திற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். மராட்டிய முன்னாள் முதல்-ம்ந்திரி அசோக் சவானும் பாண்டேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கடைசி நிமிடம் வரை பாண்டே தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டிருந்தார் என ராகுல்காந்தி கூறினார். கிருஷ்ண குமார் பாண்டே மராட்டிய மாநில காங்கிரசின் சேவா தள பொதுச்செயலாளர் ஆவார். மராட்டிய மாநிலத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 15 சட்டமன்ற மற்றும் 6 நாடாளுமன்றத் தொகுதிகள் வழியாக 15 நாட்களில் ராகுல் காந்தி பயணம் செய்து 382 கி.மீ. செல்கிறார். இந்த யாத்திரை நவம்பர் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைகிறது.