வங்கக்கடலில் உருவான "மிச்சாங் புயல்" !

03.12.2023 09:47:51

இந்திய தென்மேற்கு, வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று (02) அதிகாலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (03) மிச்சாங் புயலாக உருவானது.

மிச்சாங் புயல் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 310 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

நாளை (04) முற்பகல் வேளையில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகளை மிச்சாங் புயல் அடையும்.

நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே வருகிற 5 ஆம் திகதி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வீசும்.

இந்தியாவில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, பாம்பன், காரைக்கால், நாகப்பட்டினம் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை - மெரினா கடற்கரை கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை தரைக்காற்று வீசுவதால் புழுதிக்காற்று வீசுகிறது.

சென்னையில் பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.