எரிவாயு விவகாரம் குறித்து ஆராய கூட்டம் இன்று கூடுகிறது!

01.12.2021 05:29:52

சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு தொடர்பில் வெளியாகும் தகவல் குறித்து ஆராய்வதற்கான, அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

காலை 9 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபைமுதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று இது தொடர்பில் முன்வைத்த யோசனைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அனுமதி வழங்கியதற்கமைய, இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, சமையல் எரிவாயு கொள்கலன் அனர்த்தங்கள் தொடர்பான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு அறிக்கை, நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயன்முறை பொறியியல் பேராசிரியர் சாந்த வல்பலகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், எரிவாயு சம்பந்தமான சிக்கல்கள் இருப்பின் 1311 என்ற அவசர இலக்கத்துக்கு அழைக்குமாறு லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கோரியுள்ளது.