"தவெக கூட்டணியில் சேர்வதாக இல்லை".
|
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தவெகவுக்கு மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆதரவு தெரிவித்திருந்தது. இப்படி இருக்கையில், தவெக கூட்டணியில் சேர்வதாக இல்லை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியிருக்கிறார். இது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணியில் இடதுசாரிகள் இருப்பது என்பது, கடிவாளம் போன்றது. இடதுசாரிகள் ஆட்சியை மக்களுக்கு எதிரான திசையில் போய்விடாமல் இழுத்து பிடித்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை திமுகவுக்கும் இருந்தது. தவெகவும் இப்படித்தான் நினைக்கிறது.
|
|
சூழல் இப்படி இருக்கையில் கூட்டணியில் சேர மாட்டோம் என்று சிபிஎம் கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. திட்டம் என்ன? இது குறித்து பெ.சண்முகம் பேசியதாவது, "சிறு குறு தொழில்களை பாதுகாப்பதன் மூலமாக அதிகமான பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று தர முடியும். இதற்கெல்லாம் தவெக அரசு என்ன மாதிரியான கொள்கைகளை வைத்திருக்கிறது என்பது நிதிநிலை அறிக்கையில் வெளிப்படலாம். தமிழ்நாட்டில் பெரும் பகுதியாக இருக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு இவர்கள் என்ன மாதிரியான திட்டங்களை அமல்படுத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நமக்கு ஏற்புடையதாக இருந்தால் அதை நாம் வரவேற்போம். ஏற்புடையதாக இல்லை என்றால் எதிர்ப்பது என்கிற கொள்கையைதான் இந்த ஆட்சியை பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைபிடித்து வருகிறது. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது தொடரும். இப்போதைக்கு இந்த ஆட்சி உடன் கூட்டணி என்பதெல்லாம் ஒன்றும் உருவாகவில்லை. நாம் அந்த கூட்டணியில் சேர்வதாகவும் இல்லை. இடதுசாரிகளின் கூட்டணி நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.. இடதுசாரி அணி என்பதுதான் நம்முடைய நிரந்தரமான அணி. இடதுசாரி ஒருங்கிணைப்பு குழு என்பதுதான் நம்முடைய நிரந்தரமான வழி. இதைத்தான் கட்சியின் மாநில குழு தீர்மானித்திருக்கிறது. எனவே அதன் அடிப்படையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கும். ஆட்சிக்கு ஏன் ஆதரவு என்பதை ஏற்கெனவே விளக்கி இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். தவெக தலைமையிலான ஆட்சி அமைய ஆதரவு கொடுப்பது என்று இடதுசாரிகள் தீர்மானித்த போது, வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு என்று சொன்னார்கள். அதாவது காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் போன்று அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம் என்று இடதுசாரிகள் கூறியிருந்தனர். இப்போது வரை இந்த நிலைப்பாட்டில் அவர்கள் தொடர்கின்றனர். ஆனால், வெளியிலிருந்து ஆதரவு என்றால்.. எப்போது வேண்டுமானாலும் கழன்று செல்வார்கள் என்கிற பயம் தவெக அரசுக்கு.. முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. எனவே எப்படியாவது இடதுசாரிகளை அமைச்சரவைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று தவெக தலைமை யோசித்து வந்திருந்தது. ஆனால், பெ.சண்முகம் கூட்டணியில் சேர மாட்டோம் என்று கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. |