
இலாபம் யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது?
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், நமது நாட்டில் எவ்வித விலை திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அன்று எரிபொருளால் கிடைத்த இலாபம் தேசிய மக்கள் சக்தி கூறியதைப் போன்று கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் சென்றது உண்மையெனில், இன்று அது யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பினார். |
கொழும்பில் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களால் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி அப்போதைய அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் செல்வதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்தியது. ஆனால் இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அவ்வாறெனில் இப்போது கிடைக்கும் இலாபம் யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது? அன்று உண்மையைக் கூறியிருந்தால், இன்று அரசாங்கத்துக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அன்றைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தான் இன்றும் இந்த அரசாங்கத்துக்கு உதவுகின்றனர். அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவே பங்கேற்கின்றார். தமது ஆட்சியில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனக் கூறிய நிதி அமைச்சின் செயலாளரும், மத்திய வங்கி ஆளுநரும் இன்றி இந்த அரசாங்கத்தால் எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அன்று கூறிய பொய்களால்தான் இன்று இந்த அரசாங்கம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. அரசாங்கத்தின் அழிவு வெகு தொலைவில் இல்லை என்றார். |