போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும்

05.04.2024 07:42:01

காசா யுத்தத்தை இஸ்ரேல் மிகவிரைவில் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹியுஜ் ஹெவிட் என்ற பழமைவாத ஊடகவியலாளருக்கு வழங்கிய பேட்டியில்  டொனால்ட் டிரம்ப்  இஸ்ரேலிற்கான இந்த கடுமையான செய்தியை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரச்சார யுத்தத்தில் தோல்வியடைந்துகொண்டிருக்கின்றது என தெரிவித்துள்ள டிரம்ப் இரத்தக்களறியை வேகமாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை முடிவிற்கு கொண்டுவருவோம் சமாதானத்தை ஏற்படுத்துவோம் மக்களை கொலை செய்வதை நிறுத்துவோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இதனை செய்தாகவேண்டும் இயல்பு நிலை சமாதானாத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதால் இஸ்ரேல் இதனை மிகவேகமாக செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் போதுமான அளவிற்கு இஸ்ரேலிற்கு ஆதரவளி;க்கவில்லை எனவும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் உத்தேச வேட்பாளர் காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நிலையில் இஸ்ரேல் பயன்படுத்தும்  தந்திரோபாயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இஸ்ரேல் செயற்படும் விதம் எனக்கு பிடித்துள்ளதா என்பதை தெரிவிக்க முடியாது ஏனென்றால் நீங்கள் வெற்றிபெறவேண்டும் ஆனால் அந்த வெற்றிக்கு நீண்டகாலம் எடுக்கின்றது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தனது தாக்குதல் குறித்த வீடியோக்களை வெளியிடுவதை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி சாடியுள்ளார்.

பயங்கரவாத உட்கட்டமைப்புகளிற்கு எதிரான தாக்குதல்கள் என தெரிவித்து இஸ்ரேல் விமானக்குண்டுவீச்சுகள் உட்பட ஏனைய தாக்குதல்களின் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றது 

அவர்கள் அவ்வாறான வீடியோக்களை வெளியிடக்கூடாது அதன் காரணமாகவே இஸ்ரேல் பிரச்சார யுத்தத்தில் தோல்வியடைகின்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கட்டிடங்கள் இடிந்துவிழும் மிகவும் கொடுரமான வீடியோக்களை வெளியிடுகின்றனர் இந்த வீடியோக்களை பார்த்த மக்கள் அது பலர் வசிக்கும் கட்டிடங்கள் என நினைக்கின்றனர் மக்கள் அதனை விரும்பவில்லை என தெரிவித்துள்ள டிரம்ப் இஸ்ரேல் பிரச்சார யுத்தத்தை இழக்கின்றது பெரியளவில் அதில் தோல்வியடைகின்றது ஆனால் அவர்கள் ஆரம்பித்ததை அவர்கள் முடித்துவைக்கவேண்டும் வேகமாக முடித்துவைக்கவேண்டும் நாங்கள் வாழ்க்கையை தொடரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.