சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: நீதிபதிகள் கோவைக்கு நேரில் சென்று விசாரணை !
கோவை மாவட்டம்- துடியலூர், பன்னீர் மடை கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்த வழக்கு தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் சிவஞானம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை மாவட்டம்- துடியலூர் அருகே உள்ள பன்னீர் மடை கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சிறுமி உடலிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணுவை டி.என்.ஏ.சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் இருவரின் விந்தணுக்கள் இருப்பதும் அதில் ஒன்று சந்தோஷ்குமாருடையது என்பதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த 2020 டிசம்பர் 27ஆம் திகதி, குற்றவாளி சந்தோஷ்குமாருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மற்றைய நபர் யார் என்பது குறித்து துடியலூர் மகளிர் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சந்தோஷ்குமாருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இத்தகைய சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பன்னீர் மடை கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதாவது இறந்த சிறுமியின் வீடு மற்றும் அருகில் உள்ள வீடுகளிலிருந்தவர்களிடம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்வதால் அந்த பகுதிக்கு ஊடகங்கள் செல்லக் கூடாது என 2 கிலோ மீட்டர் முன்னதாகவே பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.