ஜெர்மன் தூதுவருடன் தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு.

28.03.2026 15:05:00

மலையக தமிழரின் வீடு, வாழ்வாதார காணிக்கான உரிமை, பெருந்தோட்ட முறை மாற்றம் மூலம் தொழிலாளர், பங்காளராக மாறுவது, ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி+, மனித உரிமை விதிகள், தோட்டங்களில் நிலவும் நவீன அடிமைத்துவம், ஒதுக்கல், தொடர்பாக, ஜெர்மன் தரப்புக்கு எடுதாது கூறியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

ஜெர்மன் தூதுவர் கலாநிதி ஃபீலிக்ஸ் நியுமனை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் சந்தித்து உரையாடினர். இந்த உரையாடலில், தமுகூ அரசியல் குழு உறுப்பினர்கள் எஸ். சசிகுமார், பரத் அருள்சாமி, எஸ். பிரஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இது தொடர்பில் மனோ தனது எக்ஸ் தளத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

மலையக தமிழர், என்பவர்கள் சமீபத்தைய இந்திய வம்சாவளி பின்னணியுடைய 1.5 மில்லியன் தேசிய சிறுபான்மை இனத்தவர் ஆகும்.

இவர்களை, ஒரு தொழிலாளர் பிரிவாக மட்டும் காட்ட கயமை முயற்சிகள் முன்னெடுக்க படுகின்றன. உலகம், இந்த இன அடையாளத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக உதவிகள், மிகவும் நலிந்த பிரிவினரை அடைகிறதா என உறுதி செய்ய பட வேண்டும்.

ஜெர்மனியில் சிதறி வாழும் சிறுபான்மை சமூகங்களான டேன்ஸ், சோர்ப்ஸ், ஃபிரீசியன், சிநிதி-ரோமானியர், ஆகியோர் அனுபவிக்கும் நலவுரிமைகள் பற்றி அறிய விரும்புகிறோம். அதன் மூலம், எமது அரசியலமைப்பு யோசனையான நில-சார்பற்ற சமூக சபை (NTCC) முன்மொழிவை மேலும் சிறப்பிக்க விரும்புகிறோம்.

ஜெர்மன் தூதுவர் மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் தாம் தெளிவு கொண்டுள்ளதாகவும், அதை தற்போது மென்மேலும் விரிவு படுத்தி கொண்டதாகவும், தொடர்ந்து நமக்குள்ளே உரையாடலை தொடர விரும்புவதாகவும், தெரிவித்தார்.