மத்திய கிழக்கு நெருக்கடியும் இலங்கைக்கான தாக்கமும்.

01.03.2026 14:40:42

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து, அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் டியூடர் வீரசிங்க இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார். 

உலகின் தினசரி எண்ணெய் உற்பத்தி 100 மில்லியன் பீப்பாய்களாகக் காணப்படும் நிலையில், இதில் 20% மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த உற்பத்திக்குத் தடை ஏற்படும் பட்சத்தில், உலகப் பொருளாதாரத்தில் அதன் தாக்கமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த டியூடர் வீரசிங்க: 

"நமது தேயிலை ஈரானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அரபு நாடுகளுக்கும் ஏனைய ஏற்றுமதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில், இந்தப் போரின் காரணமாக அந்த வர்த்தக நடவடிக்கைகள் முடங்கக் கூடும். ஏற்கனவே நாடுகளுக்கு இடையிலான பல விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமையானது உலகப் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும், சர்வதேச உறவுகளிலும் ஒரு தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்."