கலந்தியா அகதிகள் முகாமை சூறையாடிய இஸ்ரேல்!

07.08.2026 07:56:13

கலந்தியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 51 பேர் வரை காயமடைந்துள்ளனர். மேற்குக் கரையில் உள்ள கலந்தியா(Qalandiya) அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய சோதனையின் போது நடத்திய வன்முறை தாக்குதலில் குறைந்தது 51 பேர் வரை காயமடைந்து இருப்பதாக ஜெருசலேம் ஆளுநரகத்தின் தரவுகளை கொண்டு அல் ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.

இரண்டாவது நாளாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய படையினர் இத்தகைய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கிட்டத்தட்ட 70 பேர் வரை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் முகாமில் இருந்த 7 குடியிருப்பு வீடுகளை இஸ்ரேலிய படையினர் இடித்து தள்ளியுள்ளனர்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் வசிக்கும் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து இருப்பதோடு பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா, ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து இஸ்ரேலிய தொடர் இராணுவ நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக மருத்துவ மையங்கள், பொதுமக்களின் உள்கட்டமைப்புகள், அதிகரிக்கும் பொதுமக்கள் உயிரிழப்பு ஆகியவற்றை குறிப்பாக சுட்டிக்காட்டி கண்டித்துள்ளனர்.