இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்திற்கான திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட இந்தியா–இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இந்த விஜயத்தின் போது மறுஆய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான முக்கிய சந்திப்புகளும் இந்த விஜயத்தின் போது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.