மனிதப்புதைகுழியை மூடுவதற்கு இடைக்காலத் தடை!

03.06.2025 08:22:42

மன்னார் 'சதொச' மனிதப்புதைகுழி மூடப்படுவதை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணைகளை அடுத்து, வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அம்மனிதப்புதைகுழியை மூடுவதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுகாதார சீர்கேடுகள் ஏற்படக்கூடும் என்பதாலும், மனித எச்சங்கள், சான்றுப்பொருட்கள் பல எடுக்கப்பட்டிருப்பதனால் அங்கு அகழ்வுப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளத்தேவையில்லை என்பதாலும் அகழப்பட்ட மன்னார் 'சதொச' மனிதப்புதைகுழியை மூடுமாறு கடந்த மாதம் 8 ஆம் திகதி மன்னார் மாவட்ட நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் அதனை எதிர்த்து சட்டத்தரணி ரட்ணவேல் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு நேற்றைய தினம் வவுனியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இம்மனுவில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், அழைப்பாணை கிடைக்கப்பெறாததன் காரணமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் சார்பில் சட்டத்தரணிகளான ஜெகநாதன் தற்பரன் மற்றும் ரஷ்னா முபாரக் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

அதன்படி இம்மனிதப்புதைகுழியை மூடுவது தொடர்பில் அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் அனுமதி பெறப்படவில்லை எனவும், அம்மனிதப்புதைகுழியில் இருந்து மேலும் மனித எச்சங்கள் அல்லது சான்றாதாரங்கள் கண்டறியப்படாது என்ற உத்தரவாதம் இல்லை எனவும் சுட்டிக்காட்டி, ஆகையினால் அதனை மூடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் கோரப்பட்டது.

அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் சார்பில் வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி தற்பரன், இம்மனிதப்புதைகுழியை மூடுவதாயின், அதற்குரிய நடைமுறைகள் மற்றும் சர்வதேச நியமங்கள் பின்பற்றப்படவேண்டும் எனவும், அத்தோடு இது உணர்வுபூர்வமான விடயம் என்பதால் பாதிக்கப்பட்ட தரப்பினரின் ஒப்புதல் பெறப்படவேண்டும் எனவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.

அதுவரை அம்மனிதப்புதைகுழியை உரியவாறு பாதுகாப்பது அவசியம் எனவும், கிடைக்கப்பெற்ற சான்றுகளைக்கொண்டு இவ்வழக்கை முடிவுறுத்துவது பற்றிய நிலைப்பாட்டை எட்டியதன் பின்னரே மனிதப்புதைகுழியை மூடுவது உசிதமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருதரப்பினரதும் வாதங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, மன்னார் 'சதொச' மனிதப்புதைகுழியை மூடுவதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து பூரண அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.