அர்ச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்து விட்டாரா?

21.02.2026 14:00:49

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் யார் யார் எங்கு அமர வேண்டும் என்பது பற்றிய நெறிமுறையை பற்றி பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (20) நடைபெற்ற பிரதேச சபை அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த, சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் ஆசனத்துக்கு சண்டையிட்டதாக கூறுகின்றார். ஆனால் உண்மையாக அங்கு நடந்த விடயம் அதுவல்ல. எனக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் நான் அமர்ந்தால் ஒருங்கிணைப்பு குழு தலைவரின் முகம் எனக்கு தெரியாது. ஆகையாலேயே ஆசனத்தை மாற்றி தருமாறு கூறினேன். பிரதேசத்தின் முதற் குடிமகன் தவிசாளரே.

சுற்றுநிருபத்தின்படி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர், பிரதேச செயலர் மற்றும் அந்த பிரதேசத்தின் தவிசாளர் ஆகியோரே முன்னால் அமர வேண்டும். இந்த நடைமுறை சிங்கள இடங்களில் உள்ளன. ஆனால் தமிழர் பகுதிகளில் அது திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. காரணம் தமிழர் பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கவில்லை. தமிழ் கட்சிகளின் ஆட்சியே காணப்படுகின்றது.

பிரச்சினை எழுந்தவுடன் ஒருங்கிணைப்பு குழு தலைவர் எனக்கான ஆசனத்தை தனக்கு அருகே வழங்கினார். அவர் வழங்கியதால் நானும் அங்கு சென்று அமர்ந்தேன். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, என்னை அவ்விடத்தில் இருந்து அகற்றும்படி பொலிஸாருக்கு உத்தரவிடுகின்றார். அதனை கேட்டு பொலிஸாரும் பாய்ந்து எழும்பி வருகின்றார்கள். பொலிஸார் எழுப்பி வருகின்றார்கள் என்றால் நான் யாருக்காவது அடிக்க போனேனா அங்கு?

அன்றையதினமே சிறிது நேரத்தின் பின்னர் பொலிஸாருக்கு உத்தரவிட்டது குறித்து அர்ச்சுனாவை கேட்டிருந்தால் அவர் கூறியிருப்பார் அப்படி நான் எதுவும் செய்யவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று. அவர் காலை ஒரு கதை கதைப்பார், மாலை ஒரு கதை கதைப்பார், அடுத்த நாள் ஒரு கதை கதைப்பார். அது அவரது பழக்கதோசம்.

அன்று நடைபெற்ற சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நான் பல கேள்விகளை கேட்டேன். அத்தனை கேள்விகளில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜாவை காப்பாற்றினார்.

டிட்வா புயல் காலப்பகுதியில் இளவாலை பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தாராஜா அங்கு நிலைமைகளை பார்வையிட்டு விட்டு, உரிய இடங்களுக்கு கடிதம் அனுப்புவதாக மழுப்பும் வகையில் பதிலளித்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் என்னை அழைத்ததன் பேரில் நான் அங்கு சென்று அவர்களுக்கு தீர்வு கூறினேன். அந்தவிடயம் பற்றி நான் கூட்டத்தில் கதைத்தவேளை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரை அர்ச்சுனா காப்பாற்றினார்.

மாதகலில் உள்ள நரியோடை வீதியானது அரச நிதி ஒதுக்கீட்டில் 2.4 மில்லியன் ரூபா செலவழித்து புனரமைப்பு செய்யப்பட்டது. அது வெள்ளம் ஓடுகின்ற பாதை. அந்த வீதியில் ஓடுகின்ற வெள்ளம் தடைப்பட்டு காணப்பட்டது. இதுகுறித்து நான் அன்றைய கூட்டத்தில், அரசின் பெரியாழ்வார் நிதியை பெற்று அதனை சீர்செய்ய வேண்ணும் என பேசியபோது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறுக்கிட்டு அந்தளவுக்கு நிதி இல்லை என கூறி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரை காப்பாற்றினார்.

கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்திய பின்னர் பிரஜா சக்தியின் தேவை என்ன என கேள்வி எழுப்பினேன். இதன்போதும் குறுக்கே பாய்ந்து அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரை அர்ச்சுனா காப்பாற்றினார்.

பாராளுமன்ற குழு தலைவர் அன்று வெறும் பொம்மையாகவே இருந்தார். ஒரு பதிலும் சொல்லவில்லை. பொலிஸாருக்கு அருச்சுனா உத்தரவிட்டு பொலிஸார் எழும்பியபோதும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிரித்துக்கொண்டு இருந்தார். அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஒருமுறைதான் வாய் திறந்தது எனக்கு தெரியும், அதாவது நான் கோபப்பட்டு வெளியே செல்ல முயன்றவேளை நீ போடா என்று சொன்னார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். இராணுவத்தை அழைப்பார். அன்றுகூட பொலிஸாருக்கு உத்தரவு போட்டீர்களா என்று ஒரு மணிநேரத்தின் பின் கேட்டால் இல்லை என்று சொல்லி இருப்பார். ஏனென்றால் அவர் காலை ஒன்று பேசுவார், மாலை ஒன்று பேசுவார், அடுத்தநாள் ஒன்று பேசுவார். என்ன பேசுகின்றேன் என்றுகூட அவருக்கு தெரியாது. இதைதான் நகைச்சுவையாகத்தான் பார்க்கிறேன் என்றார்.