ஓட்டமாவடி மையவாடி கூட்டம் இரத்து!

26.09.2021 12:48:09

மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும்  ஓட்டமாவடி மஜ்மா நகரில் நிலவும் இடப்பற்றாக்குறை தொடர்பாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம்  காவல்துறையினரின் தலையீட்டால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார். 

ஓட்டமாவடி பிரதேச சபையில்  இந்த கூட்டம்  இன்று காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து இக் கூட்டத்தில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு கூட்டம் ஆரம்பமாக இருந்த சில நிமிடங்களுக்கு முன்னர் அங்கு வந்த வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான காவல்துறை குழுவினர் சென்று கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவே கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றும் கூட்டத்துக்கு வந்த நபர்களை கலைந்து செல்லுமாறும் வேண்டிக் கொண்டனர்.

இதனையடுத்து இக் கூட்டத்தை இரத்து செய்ததையடுத்து அங்கு வந்திருந்த பிரமுகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக அவர் தெரிவித்தார்.