'செம்மணி மனிதப்புதைகுழி.

16.07.2026 09:53:24

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதிலும், உண்மையைக் கண்டறிவதிலும், போதிய ஆதாரங்கள் இருப்பின் இம்மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதியை உறுதிசெய்வதிலும் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் அடைந்திருக்கும் தொடர் தோல்வியின் அடையாளமாக செம்மணி, சித்துபாத்தி மனிதப்புதைகுழி மாறியிருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

   

தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை இன்னமும் அறிந்துகொள்ளமுடியாமல் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வழங்கும் வாக்குமூலங்களின் தொடக்க வரிகளைப் பிரதிபலிக்கும் வகையில் 'செம்மணி மனிதப்புதைகுழி: நாங்கள் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்' எனும் தலைப்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

'செம்மணி மனிதப்புதைகுழியில் எனது மகனின் உடற்பாகங்கள் கண்டறியப்பட்டால் நான் உடைந்துபோவேன். அவை அங்கு கண்டறியப்படாவிட்டாலும் நான் உடைந்துபோவேன். எனது மகன் உயிருடன் திரும்பி வந்தால் மாத்திரமே என்னால் மகிழ்ச்சியடையமுடியும்' என 1999 இல் காணாமல்போன தனது மகன் குறித்து அவரது தந்தை பரமநாதன் செல்வராஜா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இதுவரை அடையாளங்காணப்பட்ட மனிதப்புதைகுழிகளில் மிகப்பெரிய மனிதப்புதைகுழியான செம்மணி, அதன் அளவு, ஆதாரங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் காலப்பகுதி, அக்காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வலிந்து காணாமலாக்கப்படல்கள், சட்டவிரோதப் படுகொலைகள் மற்றும் ஏனைய மிகமோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், அவற்றுடன் இப்பகுதியைத் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் என்பவற்றின் காரணமாக ஒரு விதிவிலக்கான மனிதப்புதைகுழி தளமாக அமைகிறது.

அதற்கமைய பல தசாப்தகாலமாக சாட்சியங்களினால் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள், நீதிமன்ற ஆவணங்கள், சமகால ஆவணங்கள், இராணுவத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் முன்னைய விசாரணை விபரங்கள் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இனிவருங்காலங்களில் செம்மணி மனிதப்புதைகுழியை வெறும் தடயவியல் அகழ்வு நடவடிக்கையாக மாத்திரம் கருதாமல், அதனை வலிந்து காணாமலாக்கப்படல்கள், சட்டவிரோதப் படுகொலைகள் மற்றும் ஏனைய மிகமோசமான குற்றங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கான வலுவான சான்றாக நோக்கவேண்டும்.

செம்மணி மனிதப்புதைகுழி மீறல்களுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் எவரும் இதுவரையில் குற்றவியல் அடிப்படையில் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை. மாறாக அக்காலப்பகுதியில் மீறல்கள் இடம்பெற்ற பகுதிகளில் பணியாற்றிய அதிகாரிகள் பலர், பின்னாளில் மிகையான அதிகாரங்களைக் கொண்ட பொறுப்புகளுக்குப் பதவி உயர்த்தப்பட்டனர்.

செம்மணி மனிதப்புதைகுழிக்கு கடந்த மாதம் விஜயம் மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் போதிய தகவல்கள் இல்லை எனக் குறிப்பிட்டதுடன், அம்மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரே அடையாளம் காண்பிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

செம்மணியில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் போதிய ஆதாரங்கள் உள்ளன. அவ்வாறிருக்கையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தவறியமையானது பொறுப்புக்கூறலில் தொடர்ந்து நிலவும் குறைப்பாட்டையே காண்பிக்கின்றது.

இவையனைத்தும் பொறுப்புக்கூறலில் ஏற்படும் தொடர் பின்னடைவு துஷ்பிரயோகங்கள் தொடர்வதற்கு எவ்வாறு காரணமாகிறது, அது அரச கட்டமைப்புக்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை எவ்வாறு சீர்குலைக்கிறது, அது மிகமோசமான மீறல்களுடன் தொடர்புடைய நபர்கள் எவ்வித முறையான மதிப்பீடுகளுமின்றி அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு எவ்வாறு இடமளிக்கிறது என்பதை வெளிக்காட்டுகின்றன என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.