06 மாத சிறை – இரண்டு படகுகள் அரசுடமை!

05.04.2024 08:17:39

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளருக்கு 06 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் , இரண்டு படகுகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

 

அவர்கள் மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மன்றில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கடற்தொழிலாளர்கள் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதன் போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

மூன்று படகுகளில் ஒரு படகோட்டிக்கு 06 மாத சிறைத்தண்டனை விதித்த மன்று , ஏனைய 24 கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 05 வருட காலங்களுக்கு ஒத்திவைத்தது.

மூன்று படகுகளில் , ஒரு படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டவர்களுக்குள் இருந்தமையாலும் , மற்றுமொரு படகின் உரிமையாளரின் மகன் படகில் இருந்ததுடன், தந்தை உடல்நல குறைப்பாடுகளுடன் காணப்படுவதுவாக மருத்துவ சான்றிதழை மன்றில் சமர்ப்பித்து , மகன் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாலும் இரு படகுகளையும் அரசுடைமையாக்க மன்று பணித்தது.

அத்துடன் மற்றைய படகு தொடர்பான விசாரணைக்கு ஜூன் மாதம் 12ஆம் திகதி வழக்கினை ஒத்திவைத்த மன்று அன்றைய தினம் படகின் உரிமையாளரை மன்றில் முன்னிலையாகுமாரும் பணித்துள்ளது.