
பா.ஜ.க-வினர் 5 பேர் கைது!
சென்னை காரப்பாக்கம் பகுதியில் பா.ஜ.க-வின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில், பா.ஜ.க-வினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. சென்னை காரப்பாக்கம் பகுதியில் பா.ஜ.க-வின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில், பா.ஜ.க-வினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. மும்மொழிக் கொள்கை மூலம் மத்திய அரசு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் ஆளும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கின்றன. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கும். மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதில் தி.மு.க அரசு உறுதியாக இருக்கிறது. ஆனால், பா.ஜ.க, த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் மும்மொழிக் கொள்கையை ஆதரவாக பேசி வருகின்றன. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க-வின் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை (06.03.2025) தொடங்கியது. தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பா.ஜ.க-வினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். சில இடங்களில் மாணவர்கள் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட மறுத்த நிலையில், மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து கையெழுத்திட வைத்தனர். அதேபோல, சில இடங்களில், பா.ஜ.க-வினர் மாணவர்களைக் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்நிலையில், சென்னை காரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாயில் முன்பு, பா.ஜ.க சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் வெள்ளிக்கிழமை (07.03.2025) நடைபெற்றது. அப்போது, பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்களை பா.ஜ.க-வினர் பிஸ்கட் வழங்கி வலுக்கட்டாயமாக கையெழுத்திட வைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் பேரில், கண்ணகி நகர் போலீசார் பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, பா.ஜ.க கவுன்சிலர் சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். |