நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவு : ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல்!

26.01.2024 15:30:37

9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படும் என அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விஷேட வர்த்தமானி வெளியிடடப்பட்டுள்ளது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் 9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்து மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நாடாளுமன்ற அமர்வுகளை ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

அதன்படி, 9 ஆவது நாடாளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட்டதன் பின்னர், அரசாங்க கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்றக் குழுக்களும் கலைந்துவிடும்.

இதனையடுத்து, புதிய கூட்டத் தொடரின் பின்னர், ஜனாதிபதியினால் அதற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.