மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்க முடியாது.
|
வனவள திணைக்களம் மக்களது காணிகளை ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். |
|
நேற்று (25.02.2026) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். போர் காலத்தில் மக்கள் வாழ்ந்து வந்த காணிகள் தற்போது காடுகளாக மாறியுள்ளன. அவ்வாறு காடுகளாக மாறியுள்ள அந்த நிலங்கள் மக்களுக்குச் சொந்தமானவை என்பதால், அவற்றை வனவளத் திணைக்களம் ஆக்கிரமிப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நிலங்களை வேறு யாருக்கும் வழங்க முடியாது. போரினால் ஒரு கட்டத்தில் மாவட்டத்திலிருந்து மக்கள் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்தனர். நீண்ட காலம் போர் நடைபெற்ற காரணத்தால், மக்கள் குடியிருந்த பகுதிகள் இன்று காடுகளாகக் காணப்படுகின்றன. குறிப்பாக மகாவலி திட்டம் மற்றும் கிவுல் ஓயா திட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், வனவளத் திணைக்களம் என்ற பெயரில் தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். |