இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் ஒரு சிறந்த மனிதர் – மணிவண்ணன்

09.10.2021 15:09:37

இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் இழப்பு எமக்கு பாரிய இழப்பென யாழ் மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியின் மறைவு தொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

அந்த அறிக்கையிலே,அவரது இறுதி காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பும் அவரிடம் ஆசீர்வாதம் பெறும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது.

மிகச்சிறந்த பண்பாளன் எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பரமோ பந்தாவோ அற்ற எளிமையின் வடிவமான மிகச்சிறந்த மனிதன் மிகச்சிறந்த நிர்வாகி அவர்.

அவர் எம்மை விட்டு பிரிந்த போதும் அவருக்கு நிகரான அல்லது ஒருபடி மேலான தனது புதல்வனை எமக்கு தந்திருக்கின்றார்.

இன்று யாழ் மாநகர சபை தற்காலிகமாக இயங்குகின்ற இடம் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு உரித்தான இடம். யுத்தத்தினாலே நகரில் இருந்த மாநகர சபை கட்டடம் இடிந்து அழிந்த போது அதனை தற்காலிகமாக இயக்க ஓர் இடம் தேவைப்பட்டது. அவ் இடத்தினை இலவசமாக மாநகர சபைக்கு தந்துதவியவர் இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரே ஆவார்.

அந்த வகையில் அவரது இழப்பு எமக்கு பாரிய இழப்பு. அவரது பிரிவால் துயர் உற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் பக்தர்கள் அனைவருக்கும் எனதும் மாநகர சபையினதும் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய நல்லூர் கந்தனை வேண்டுகின்றேன் – என்றுள்ளது.