சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம்.

06.03.2026 07:59:27

நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதேச உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் ஈரானிய கப்பல் விவகாரம் தொடர்பில் தீர்மானம் மேற்கொண்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த விடயத்தைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய ஜனாதிபதி,                                                         

தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும்  நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம். 

எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது  எந்த வகையிலும் எந்தவொரு நாட்டிற்கும் சார்பாகவோ எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படும் வகையிலோ பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்.

மோதல் ஆரம்பமான சந்தர்ப்பம் முதல்  நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் எமது அறிவிப்புகள் என்பன எமது நிலைப்பாட்டிற்குட்பட்டதாகவே முன்னெடுக்கப்பட்டன. 

இந்த நிலையிலே இரு ஈரான் நாட்டு கப்பல்கள்  தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. 

அதிலும் நாம் நடுநிலையையே பின்பற்றியுள்ளோம். 

நாடென்ற வகையில் எந்த வகையிலும் நடுநிலையை பாதுகாக்கும் அதே சமயம் மனிதாபிமானத்திற்கு முதன்மையளிக்கிறோம். 

மனித உயிர்களை பாதுகாக்க ஒருபோதும் பின்நிற்க மாட்டோம்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி எமது நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடாக மார்ச் 9 முதல் 13 வரை எமது துறைமுகத்திற்கு வருகை தர அனுமதி வழங்குமாறு ஈரான் கோரியிருந்தது. 

ஒத்துழைப்பை மேம்படுத்துவற்கான விஜயமாக அது குறிப்பிடப்பட்டிருந்தது.  

இது தொடர்பில் நாம் ஆராய்ந்ததில் எமது நாட்டு கடற்பரப்பிற்கு அருகில் அதற்கு வெளியில் ஈரான் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

ஒத்துழைப்பு விஜயங்கள் அவ்வாறு முன்னெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பல செயற்பாடுகள் இருக்கின்றன.   அது தொடர்பில் நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். 

இந்த நிலையில் நாம் தற்பொழுது எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள கப்பலில் இருந்த கடற்படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி எமக்கு அறிவிக்கப்பட்டது. 

 

அவரையும் அதிகாரி ஒருவரையும்  கரைக்கு எடுத்து வர அனுமதி கோரியிருந்தனர். அதற்கமைய அவர்களை அழைத்து வந்து தேவையான சிகிச்சைகளை வழங்கினோம்.

 

இந்த நிலையில் தான் கடந்த 4 ஆம் திகதி அதிகாலை  5.08- 5.30 ற்கும் இடைப்பட்ட நேரத்தில்  காலி துறைமுகத்தில் இருந்து 19 கடல் மைல் தொலைவில் கப்பலொன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பிரதேசத்தில் அனர்த்த சமிக்ஞை எழுப்பப்பட்டிருந்தது.

எமது கடற்படையும் விமானப் படையும் பாரிய முன்னெடுப்பில் ஈடுபட்டன. நாம் பக்கசார்பற்றவர்கள் என்பதைப் போன்றே மனிதாபிமானம் கொண்டவர்கள். பலர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருந்தனர். 

எனவே எமது கடற்படையினரும் விமானப் படையினரும் துரிதமாக தலையிட்டு 32 பேரை மீட்டனர். 84 பேரின் சடலங்கள் மீட்க்கப்பட்டன.  

அந்த சடலங்களையும் காயமடைந்தவர்களையும் கரைக்கு எடுத்து வந்தோம். 

காயமடைந்தோர் கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

 

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த IRIS கப்பலில் இருந்து  4 அல்லது  5 ஆம் திகதியில் எமது துறைமுகத்தில் நங்கூரமிட வெளிவிவகார அமைச்சின் ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்தனர். 

நாம் அது குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தோம். எமது வெளிவிவகார அமைச்சர் , ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் இது தொடர்பில் கலந்துரையாடினார்.  

தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாதுகாப்பு தரப்பினரும் கூட ஆராய்ந்தனர். 

கப்பலின் ஒரு இயந்திரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது.

எமது கடற்பரப்பில் பின்பற்றப்படவேண்டிய சர்வதே உடன்பாடுகள் உள்ளன. யுத்தத்துடன் தொடர்புள்ள ஒரு தரப்பிற்குரிய கடற்படை கப்பல் என்பதால் நடுநிலையான நாடு என்ற வகையில் எவ்வாறு அவ்வாறான கப்பல் தொடர்பில் செயற்படுவது என்பது குறித்தும் ஐ.நா. சமுத்திர சட்டம், 1907 ஹேக் சட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் என்பவற்றின் அடிப்படையில் அவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடினோம்.

இது சாதாரண நிலைமை அல்ல. நடுநிலையான நாட்டில் ஒரு தரப்பிற்குரிய கப்பலொன்று எமது துறைமுகத்திற்கு பிரவேசிக்க அனுமதி கோரப்பட்டிருந்தது. அதனை சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே கையாள வேண்டும். இதனை அவசரப்பட்டு செய்ய முடியாது. 

 

சட்டங்கள் மற்றும் சர்வதேச பிணைப்புகள் தொடர்பில் இருதரப்பும் ஒரு புரிந்துணர்விற்கு மற்றும் உடன்பாட்டிற்கு வர வேண்டும். எமது கடற்படை அதிகாரிகளும் அந்த கப்பலின்  மாலுமியுடனும் ஈரான் தூதரகத்துடனுடன் கலந்துரையாடினார்கள்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் கப்பலில் உள்ளவர்களையும் கப்பலையும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நாம் தயார் என அறிவித்தோம்.

கப்பலில் இருப்போரை மீட்கவும் கப்பலை நங்கூரமிடும் இடம் தொடர்பிலும் பொது உடன்பாட்டிற்கு வந்தோம். கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலே இந்த கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. கொழும்பு துறைமுகம் எமது பிரதான வர்த்தக துறைமுகமாகும். இந்த கப்பலை இங்கு நிறுத்துவது எமது கடல் சார்ந்த வர்த்தகத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். 

சில கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணங்களை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். அதனால் அந்த கப்பலை திருகோணமலைக்கு எடுத்துச் செல்ல முடிவு  செய்தோம். 

கப்பலில் இருப்போரை கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வருவதற்காக எமது கடற்படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

208 பேர் கரைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 53 அதிகாரிகளும் 84 கெடட் அதிகாரிகளும் 48  சிரேஸ்ட கடற்படையினரும் 23 கடற்படையினரும்  உள்ளனர். 

 

அவர்களை எமது படகுகளில் ஏற்றி  கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் பின்னர் ஈரான் கடற்படையினரும் எமது கடற்படையினரும் இணைத்து கப்பலை திருகோணமலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்கள்.

எனவே நாம் தெளிவான நிலைப்பாட்டையே  பின்பற்றுகிறோம். எந்த நாட்டுக்கு பக்கசார்பாகவோ எந்த நாட்டுக்கு அடிபணிந்தோ நாம் செயற்பட மாட்டோம். எமது நாடு இறையான்மையுள்ள நாடு. அரசாங்கமென்ற வகையில் எமது கடற்பரப்பு தொடர்பிலும் எமது நாடு தொடர்பிலும் எமது மக்கள் தொடர்பிலும் எமக்குப் பொறுப்புள்ளது. அவையும் எமக்கு முக்கியமானவை. அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அன்றி எமது மக்கள் மற்றும்  எமது தாய்நாடு தொடர்பில் முன்னுரிமை அளித்தே தீர்மானங்களை எடுக்கின்றோம். 

வெளியில் எவ்வாறான கோசம், அழுத்தம் இருந்தாலும் நாம் குழப்பமடைய மாட்டோம். எமது நடுநிலை போக்கை பாதுகாத்து எமது மனிதாபிமானத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது எமது நிலைப்பாடாக இருந்தது. எந்த நாட்டுப் பிரஜையும் இவ்வாறான மோதலினால் உயிரிழப்பதை நாம் ஏற்கவில்லை. சகல பிரஜைகளினதும் உயிர்கள் தமது உயிர்களுக்கு சமமானதாக கருதி செயற்பட வேண்டும். அதற்கமையவே நாம் இந்த முடிவுகளை எடுத்து செயற்படுத்தினோம்.

அதன்படி அவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டோம். உலகின் அமைதிக்காக தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும்  என யுத்தத்துடன் தொடர்புள்ள அனைத்து தரப்பினரிடமும் கோருகிறோம். மக்கள் உயிரிழக்கின்றனர். 

 

பாரிய பொருளாதார நெருக்கடி சூறாவளியாக வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்த யுத்த நிலைமையினால் எங்கும் சிக்கல் நிலை உருவாகும் அபாய நிலை  உருவாகியுள்ளது.  அமைதியையே முழு உலகமும் எதிர்பார்க்கிறது.  அமைதிக்காக அனைவரும் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும்.  நாடென்ற வகையில் அமைதிக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்போம்.

இந்த விவகாரம் தொடர்பில் பொய்யான, பயமுறுத்தும் நோக்குடனான அதிகமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதே உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் நாம் இந்த தலையீட்டை  செய்தோம். இது நாடென்ற வகையில் மிகவும் தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும் – என்றார்.