ராஜபக்ச கும்பலுடன் இணைந்து ரணில் அராஜகம்!

11.09.2022 09:32:10

அதிபர் ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்றையதினம் யாழ். மாவிட்டபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதே ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பாதிப்பு காரணமாக தற்போதும் 46 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றியவர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தற்போது கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களது உண்ணாவிரத போராட்டத்திற்கு பூரண ஆதரவை தெரிவிக்கின்றோம்.

தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் தலைவர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இதனால் சிங்கள மக்களும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்தனர். சிங்கள பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் உருவாகும் என குட்டிமணி தெரிவித்திருந்தார். தற்போது என்ன நடக்கின்றது.

காலிமுகத்திடல் போராட்டம் மிக அமைதியாக இடம்பெற்றது. இதன் காரணமாக நாட்டில் பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டு அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச விரட்டியடிக்கப்பட்டார்.

ரணில் அராஜகம்

வெறும் 134 வாக்குகளுடன் நாடாளுமன்றில் அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க ராஜபக்ச கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார்.

போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம்.

நாட்டில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இல்லை. பொருட்களின் விலைகளோ அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் எதற்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எங்கிருந்து பணம் செலவிடப்படப்போகின்றது” என்றார்.