நாட்டில் பயங்கரவாத சிலீப்பர் செல்களை அடையாளம் காண குழு அமைக்கப்படும்

26.11.2022 10:23:42

நாட்டில் பயங்கரவாத சிலீப்பர் செல்களை அடையாளம் கண்டு, ஒழிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. சார்பில் நட்சத்திர பிரசாரகர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதன்படி அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு இன்று தொண்டர்கள் முன் பேசினார்.

அவர் பேசும்போது, நாட்டில் அச்சுறுத்தும் ஆற்றல் வாய்ந்த சக்திகள், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஆகியவற்றின் சிலீப்பர் செல்களை அடையாளம் கண்டு அவற்றை ஒழிப்பதற்கான குழு ஒன்றை நாங்கள் அமைப்போம் என கூறியுள்ளார்.

பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதற்கு எதிரான சட்டம் ஒன்றையும் உருவாக்குவோம். பொது மற்றும் தனியார் சொத்துகளை தாக்கி சேதப்படுத்தும் சமூக விரோத சக்திகளிடம் இருந்து அவற்றை மீட்பதற்கேற்ற வகையில் சட்டம் இயற்றப்படும் என்று பேசியுள்ளார்.