இன்று தி.மு.க. – காங்கிரஸ் இடையே உடன்பாடு கையெழுத்து !

07.03.2021 08:32:35

தி.மு.க. – காங்கிரஸ் இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது குறித்து இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்றிரவு சந்தித்து பேசினார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குண்டுராவ், இன்று காலை 10 மணியளவில் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவித்தார். எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்ற விபரமும் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் சீட் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசிய பிறகு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.