இலங்கையை பொருளாதார நாடாக மாற்றுவதற்கான திட்டம் தயாரிப்பு

17.04.2024 15:21:54

பொருளாதாரத்தை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள சீர்திருத்த செயற்பாட்டின் மூலம் இலங்கை மக்கள் நல்ல பலன்களை பெற்று வருவதாகவும் எனினும் இதற்கு இருதரப்பு மற்றும் பலதரப்பு பங்காளிகளின் ஆதரவை இன்னும் எதிர்பார்க்கிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜி – 24 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதுடன், ஏற்றுமதி செயல்முறையை வலுப்படுத்தி, நேரடி வெளிநாட்டு முதலீட்டின் ஊடாக வெளிநாட்டுக் கடன்களைப் பெறாமல் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சிப் பாதைக்கு செலுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 35% இலிருந்து 70% ஆக அதிகரிப்பதே இலங்கையின் இலக்காகும் என்றும் அவர் கூறினார்.

மேலும் இலங்கையை பொருளாதார நாடாக மாற்றுவதற்கான நாட்டின் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், கடல்சார் இடம் சார்ந்த திட்டத்தை உருவாக்கும் பணியை இலங்கை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.