ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

16.05.2025 07:23:21

ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா? அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா? என்பதை அந்நாடே முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகின்றது. அத்துடன்  அணு ஆயுத உற்பத்தியை நிறுத்தவில்லை என்றால்  கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தொடர்ந்தும் ஈரானை எச்சரித்து வருகின்றது.

இந்நிலையில் கட்டாரின் தலைநகரான தோஹாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

 

இதன்போதே  ‘ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது அல்லது வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது என இரண்டு தீர்வுகள் மட்டுமே அந்நாட்டுக்கு உள்ளன எனவும்,  பிரச்சினையை மிருகத்தனமான முறையில் அல்லாமல், புத்திசாலித்தனமான முறையில் தீர்க்கவே தாம்  விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.