புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இலங்கையைக் காப்பாற்ற முடியும் – சார்ள்ஸ்

24.11.2021 11:28:52

வருமானத்தில் மிகவும் பலம் பெற்றவர்களாகவுள்ள புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இலங்கையைக் காப்பாற்ற முடியும் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன், “அரச ஊழியர்கள் நாட்டுக்குச் சுமை என்று அரசு கூறுகின்றது. ஆனால், பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டுக்கு பெரும் சுமை” என்றும் குறிப்பிட்டார்.

“பயங்கரவாதத் தடைச் சட்டமே வெளிநாட்டிலுள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தடையாக உள்ளது. குறிப்பாக உலக நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணில் அதிக பற்றுக்கொண்டவர்கள். அவர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்தால் அவர்களை அச்சுறுத்தி பணம் பறிப்பதும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைத்துப் பயமுறுத்துவதும் அவர்களுடைய முதலீட்டைத் தடுக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே இவ்வாறு  தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

“இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு கொரோனாத் தொற்று ஒரு காரணமாக இருந்தாலும் கூட நாட்டின் தவறான பொருளாதாரக் கொள்கையும் முகாமைத்துவமுமே பிரதான காரணமாகும். இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் தமது வருமானத்தையும் மீறி பாதுகாப்புக்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்குவதே நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010ஆம் ஆண்டிலிருந்து 2022ஆம் ஆண்டுவரை பாதுகாப்புக்குப் பல கோடிக்கணக்கான ரூபா நிதி ஒடுக்கப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் நாட்டுக்குச் சுமையென அரசு  கூறுகின்றது. ஆனால், பாதுகாப்புப் படைகளே இந்த நாட்டுக்குப் பெரும் சுமை.

ஆட்சியாளர்கள் தமது ஆட்சியைத் தக்கவைக்க இராணுவ ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவும், அவர்களின் வாக்கு வங்கியைத் தக்கவைக்கவுமே பாதுகாப்புப் படைகளுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். அரச சேவையில் நிபுணத்துவ அதிகாரிகளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிக்கின்றனர். இதனால் அரச அதிகாரிகள் பலர் இராஜிநாமா செய்கின்றனர்.

இலங்கைக்கு வருமானத்தைத் தருகின்ற சுற்றுலாப் பயணிகள் மிக முக்கியமானவர்கள். இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வருபவர்களில் 50 வீதமானவர்கள் வடக்கு, கிழக்கின் புலம்பெயர் தமிழர்கள் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். வருமானத்தில் மிகவும் பலம் பெற்றவர்களாகவுள்ள புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே இலங்கையைக் காப்பாற்ற முடியும்.

அதேபோல் வடக்கு, கிழக்கு மீனவர்கள், விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருட்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் பதற்றமான சூழலில் உள்ளனர். தமிழர்களின் இருப்பை அழிக்க அரசு சிங்களக் குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில்  அவசர அவசரமாக முன்னெடுத்து வருகின்றது” – என்றார்.