வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை அக்டோபரில் வரும் திட்டம்!
|
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை அக்டோபர் மாதம் முதல் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒழுங்குமுறை கண்காணிப்பை பலப்படுத்தவும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. இது படிப்படியாக தற்போது வரை 400 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டதை போல், வெள்ளி நகைகளுக்கும் ஒரு விதி கட்டாயமாக அமல்படுத்தப்பட உள்ளது. |
|
இதற்காக 6 இலக்க ஹால்மார்க் தனித்துவ அடையாள எண் முறை மற்றும் உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய தரக்கட்டுப்பாடி அமைப்பான பிஐஎஸ் 102 மாவட்டங்களில் 341 வெள்ளி பரிசோதனை மையங்களை நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரம் நகை வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். பிஐஎஸ் அமைப்பு 7 தூய்மை தரநிலைகளை அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே 2006ல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தில் எச்யுஐடி இணையதளம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 77 லட்சத்திற்கும் அதிகமாக வெள்ளி நகைகளுக்கு ஹால்மார்க் வழங்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் பிஐஎஸ் முத்திரை சில்வர் என்ற ஆங்கில வார்த்தை, தூய்மை தரம் மற்றும் எச்யுஐடி எண் இடம்பெறும். இதனை பிஐஎஸ் கேர் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் சரிபார்க்கலாம். ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்குவது, நுகர்வோர் தாங்கள் செலுத்தும் பணத்திற்கு ஏற்ற தூய்மையான வெள்ளியை பெறுவதை உறுதி செய்யும். அதுமட்டுமல்லாமல் பிஐஎஸ் சட்டம் 2016ன் படி விதிகளை மீறும் வியாபாரிகளுக்கு ஓராண்டு வரை சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம். முத்திரையை தவறாக பயன்படுத்தினால் 2 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். நாட்டில் பெரும்பாலான நகைக் கடைகளில் 92.5% ஸ்ரெட்லிங் வெள்ளி தரத்தை பின்பற்றுவதாக அனைத்து இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது. |