விஎஸ் பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தாக்கல் செய்த மனு.

03.09.2026 15:21:15

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) தீர்ப்பளிக்கிறது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாத்தில் தோல்வியடைந்தார்.

   

இதையடுத்து, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கொளத்தூர் தொகுதியில், 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சரிபார்ப்புக்கு எடுக்கப்பட்ட சில வாக்குப்பதிவு இயந்திரங்கள், திடீரென கோளாறாகி நின்றுவிட்டன எனவும், 6 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களான விவிபேடுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேடுகளை சரி பார்க்க உத்தரவிட வேண்டும் எனவும், தவெக எம்.எல் ஏ வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தரப்பு மனுவில் கோரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த வாரம் விசாரணையின்போது மு.க.ஸ்டாலின் தரப்பு, தேர்தல் ஆணையம் மற்றும் வி.எஸ்.பாபு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, இன்று (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.