ஷானியையோ, ரவியையோ நியமிக்குமாறு கோரவில்லை!
|
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளுக்கு நியமிக்குமாறு கர்தினால் ஆண்டகையோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ எந்தவொரு கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று கத்தோலிக்க திருச்சபை வலியுறுத்தியுள்ளது.
|
|
பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க விடுத்திருந்த அறிக்கை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, கொழும்பு மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். "ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை இந்தப் பதவிகளில் நியமிக்குமாறு கர்தினால் ஆண்டகையோ அல்லது கத்தோலிக்க திருச்சபையோ ஒருபோதும் கூறவில்லை." அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "இப்ராஹிமிற்கு பிணை வழங்கியது நீதிமன்றமாகும். பிணை வழங்கப்பட்டது என்பதன் அர்த்தம் அவர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டு விடுதலை செய்யப்பட்டார் என்பதல்ல. அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல், நீங்கள் குறிப்பிடும் அந்த சொத்துக்கள் இப்ராஹிமின் சொத்துக்கள் அல்ல. அவை இப்ராஹிமின் சகோதரர் ஒருவருக்கு சொந்தமானவை. எனவே, அந்த சொத்துக்களை விடுவிக்குமாறு நீதிமன்றத்திடமே கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகே நீதிமன்றம் அவற்றை விடுவித்தது. தம்மை கைது செய்ய வேண்டாம் என கோட்டாபய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பது அவருடைய உரிமை. தீர்ப்பு வரும் வரை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பொய்யான பிரச்சாரங்கள் மற்றும் பல்வேறு சேறு பூசல்களின் நோக்கம் என்னவென்றால், உயிர்த்த ஞாயிறு கொடூர பயங்கரவாதத் தாக்குதலின் உண்மைகளை வெளிப்படுத்தி, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அவற்றை சீர்குலைப்பதே ஆகும் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, சமூக ஊடகங்களில் பரவி வரும் எந்தவொரு அடிப்படையுமற்ற பொய்யான அறிக்கைகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என இந்த நாட்டின் புத்திசூர்மையுள்ள மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." |