சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு

31.01.2023 22:20:05

சிறிலங்காவின் சுதந்திர தினமான பெப்ரவரி நான்காம் திகதியைக்  கரி நாள் பிரகடன.ப்படுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் முடிவுக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் ஆகியன கூட்டாக தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உண்மையில் இத்தீவின் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் தேசத்தை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர் தாம் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு மேலாதிக்கத்தை இத்தீவின் இன்னொரு தேசமாகிய பௌத்த சிங்கள தேசத்திடம் தாரை வார்த்த கரி நாளாகவே பெப்ரவரி நான்காம் திகதியை நாம் கருதுகின்றோம்.

இனவழிப்பு நடவடிக்கை

1931 ஆம் ஆண்டில் ஆங்கலேயரால் பொறுப்பாட்சி வழங்கப்பட்ட காலத்தில் இருந்து தொடங்கிய சிங்கள பௌத்த தேசத்தின் தமிழினத்தின் மேலான இனவழிப்பு   1948 பெப்ரவரி நான்காம் திகதி முதல் முழு அதிகாரங்களுடன் தீவிரமடைய தொடங்கியது.

இன்றுவரை இரண்டு லட்சத்துக்கும் மேலான தமிழ் மக்களைக் கொன்றும், பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்களை புலம்பெயர வைத்தும், பல்லாயிரம் தமிழர்களை காணாமல் போகச் செய்தும், பல நூறு தமிழர்களை பல்லாண்டுகளாக சிறைகளில் அடைத்தும், தமிழர்களின் தாயகத்தில் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலங்களை குடியேற்றமுட்பட பலவழிகளிலும் அபகரித்தும் தமிழர்களின் பல ஆயிரம் கோடி செல்வங்களை அழித்ததும் மட்டுமல்லாது, தனிச் சிங்களச் சட்டம், கல்வியில் தரப்படுத்தல், வேலைவாய்ப்புகளில் பாரபட்சம், அபிவிருத்தியில் புறக்கணிப்பு என ஒரு நாடு என தாங்கள் கூறிக் கொள்ளும் இத்தீவில் தமிழர்களை தொடர்ச்சியாக ஓரம் கட்டி வந்துள்ளது சிங்கள பௌத்த தேசம்.

சிங்கள பௌத்த தேசம் இன்றும் அதே பாதையில் தான் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. ஆங்கிலேயர் வெளியேறிய பின்னான கடந்த 75 ஆண்டுகள் முழுவதும் தமிழின அழிப்பில் தனது பெருமளவு கவனத்தையும் பெரும்பாலான வளங்களையும் குவித்ததன் மூலம் எம்மை அழித்து பலவீனமாக்கியது மட்டுமல்லாது, இன்று தானும் பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பவற்றில் பேரழிவைச் சந்தித்து நிற்கின்றது ரூபவ் சிறிலங்கா.

ஆனாலும் இந்த நிலையிலும் கூட இன்றும் தமிழின அழிப்பிற்காக தான் தேர்ந்த எந்தவொரு செயற்பாடுகளிலும் சிறிலங்கா தளர்வை ஏற்படுத்தாமல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

தொடர்ந்து வந்த சிறிலங்கா அரசுகள் காலங்காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனக்கூறி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட வண்ணம் எம்மை ஏமாற்றியது மட்டுமல்லாது, அக்காலங்களை தமிழர்களின் அடையாளங்களை அழிக்கவும் இனவழிப்புக்கு எதிரான எமது போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதற்கும் பயன்படுத்துவதை தனது  கொண்டுள்ளது.

தமிழர்களின கரி நாள்

இன்று சிறிலங்கா அரசு மீண்டும் ஒரு தடவை பேச்சுவார்த்தை என்று இனவழிப்பைத் தொடர்வதற்கான கால அவகாசத்தை பெறுவதற்கும் எம்மை ஏமாற்றுவதற்கும் முயன்று நிற்கின்றது.

இந்நிலையில் சிறிலங்காவின சுதந்திர தினம் உண்மையில் தமிழர்களின கரி நாள் என்பதே தமிழ்த் தேசத்தின் யதார்த்தமாகும்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்து நிற்கின்றோம்” - என்றுள்ளது.