விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்?

03.01.2021 10:56:16

விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து நேற்று இரவு கோவில்பட்டி வந்து அங்குள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை 8.30 மணிக்கு வில்லிசேரி சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு பருத்தி விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்பவர்கள் விவசாயிகள்.

விவசாயத்திற்கு முதன்மையாக தேவைப்படுவது தண்ணீர். அதனை சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இந்த பிரமாதமான திட்டத்திற்கு ஒட்டு மொத்த பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்ததிட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாத ஏரி, குளங்களும், விவசாயிகள் பங்களிப்போடு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவாயிகளுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கிறது. அமெரிக்கன் படை புழு தாக்குதலில் இருந்து மக்காசோளம் பயிர்களை காக்க ரூ.45 கோடியில் அரசே பூச்சி கொல்லி மருந்தை தெளித்தது.

 

புயல், வெள்ளம், வறட்சி என விவசாயிகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து அ.தி.மு.க. அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.

பயிர் காப்பீடு திட்டம் மூலம் இந்தியாவிலேயே அதிக இழப்பீடு வழங்கியது தமிழக அரசு தான். கடந்த 4 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது. இவ்வாறாக குழந்தைகளை போல கவனித்து விவசாயிகளுக்கு தேவையானதை அரசு பார்த்து பார்த்து செய்து வருகிறது.

நான் வெளிநாடு சென்று ஆய்வு செய்ததில் 65 லிட்டர் பால் கறக்கும் பசுக்களை பார்த்தேன். அது போல கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளது. வாய்பேசுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போல வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா மற்றும் கால்நடை ஆராய்சி மையம் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது. கால்நடைகளை பாதுகாக்க அதிக அளவில் கால்நடை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் ரூ.4 கோடியில் காளை ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது. விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. கோவில்பட்டியில் 5 இடங்களில் அம்மா மினி கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு காரணமாக ஏழை மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். அடுத்தாண்டு 443 ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவார்கள். அவர்களுக்கான அனைத்து படிப்பு செலவையும் அரசே செலுத்தும்.

ஸ்டாலின் பேசும்போது நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான் என்று படத்தில் கூறுவது போல எடப்பாடி பழனிசாமி நானும் விவசாயிதான், நானும் விவசாயிதான் என கூறுவதாக பேசி உள்ளார்.

மு.க.ஸ்டாலின் விவசாயிகளை ரவுடிகளுடன் ஒப்பிட்டு பேசுகிறார். விவசாயிகளின் மனம் புண்படும்படியாக ஸ்டாலின் பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் சிந்தித்து பேச வேண்டும். இதனை விவசாயி என்ற முறையில் நான் தெரிவிக்கின்றேன்.

உழைக்கும் வர்க்கத்தை மதிக்கும் அரசு அ.தி.மு.க. விவசாயிகள் விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் அரசே கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு முழுபணமும் சென்றடையும்.

விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? வெயிலில் ஏர் பிடித்து உழுபவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தி அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சண்முகநாதன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.