ஜனாதிபதிக்கும் CHEC தலைவருக்கும் இடையில் சந்திப்பு.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், ‘சைனா ஹார்பர் இன்ஜினியரிங்’ (China Harbour Engineering Company - CHEC) நிறுவனத்தின் தலைவர் பாய் யின்ஜான் (Bai Yinzhan) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் “நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம்” காரணமாக, இலங்கையில் முதலீடு செய்வதற்குத் தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்ஜான் தெரிவித்தார். குறிப்பாக, கொழும்பு துறைமுக நகர் சிறப்புப் பொருளாதார வலயத்திற்காக வழங்கப்பட்டுள்ள ஊக்கத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்த அவர், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதையும் பாராட்டினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) இன்றியமையாத காரணியாகும் என்பதை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ள இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கம் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான திசையில் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அதிகபட்ச ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்குவதாகவும், குறிப்பாகக் கொழும்பு துறைமுக நகர் வலயத்தை அபிவிருத்தி அடைந்த பொருளாதார வலயமாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், சமீபத்தில் ஏற்பட்ட ‘டித்வா’ (Dithwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சைனா ஹார்பர் நிறுவனம் வழங்கிய ஆதரவிற்கு, ஜனாதிபதி தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருடன், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சூ போ (Su Bo) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.