ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

13.07.2021 10:42:53

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோருடன் தொடர்பா என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மீனகம் இணையத்தளத்தை நடத்துவது நீங்களா எனவும் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செ.நிலாந்தன் நேற்று (திங்கட்கிழமை) அழைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு அழைக்கப்பட்டிருந்த அவரிடம், சுமார் 3 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஊடகவியலாளரிடம் பல கேள்விகளை  கேட்ட  பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள்,   அவரின் முகநூல் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, வங்கி கணக்கு, வட்ஸ் அப் கணக்கு உள்ளிட்ட பல விபரங்களை  பெற்றுக்கொண்டதுடன் பாஸ் வேட்டையும் தருமாறு கோரியுள்ளனர்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் அங்கத்தவராக இருந்தீர்களா? உங்களது உறவினர்கள் யாரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்களா? நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்துள்ளீர்களா நீங்கள் எத்தனை வருடங்களாக ஊடகவியலாளராக உள்ளீர்கள்? எந்த எந்த ஊடகங்களுக்கு பணியாற்றுகின்றீர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுடன் தொடர்பில் இருக்கின்றீர்களா? போன்ற  கேள்விகளை அவரிடம் கேட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான இணையத்திற்கும் தொடர்பு உள்ளதா? உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறதா?  எந்த நாட்டில் இருந்து பணம் வருகிறது? யார். யார்? பணம் அனுப்பினார்கள்? எந்த எந்த ஊடக அமைப்புகளில் அங்கத்தவராக உள்ளீர்கள்? என பல கேள்விளை கேட்டு,  அதற்கான பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து பல இடங்களில் கையொப்பங்களை பெற்றுக் கொண்டுள்ளதாக ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.