மம்தா மருமகனுக்கு எதிராக திரிபுராவில் பா.ஜ மறியல்!

03.08.2021 12:51:21

திரிபுராவில் கோயிலுக்கு சென்றபோது மம்தாவின் மருமகனான, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் வாகனத்தை பாஜ தொண்டர்கள் ஆங்காங்கே மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி. இவர் திரிபுராவில் உள்ள திரிபுரேஸ்வரி கோயிலுக்கு நேற்று சென்றார். 

இதற்காக அகர்தலா விமான நிலையத்தில் இருந்து அவரது கான்வாய் புறப்பட்டது. அப்போது மேற்கு திரிபுரா மாவட்டமான சாரிலிம்மில் அபிஷேக்கின் வாகனத்தை பாஜ தொண்டர்கள் மறித்தனர்.

 சாலையை மறித்து அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக முழக்கமிட்டர். மேலும் தாங்கள் வைத்திருந்த பதாகைகளால் அபிஷேக்கின் காருக்கு பின்னால் பாதுகாப்புக்கு வந்த கார்களை தாக்கினார்கள். 

இதனை தொடர்ந்து அங்கிருந்து கான்வாய் புறப்பட்டு சென்ற நிலையில், சிப்ஹிஜாலா மாவட்டத்தில் கமலாசாகர் பகுதியில் மீண்டும் பாஜ தொண்டர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

பின்னர் உதய்பூரில் உள்ள திரிபுரேஷ்வரி கோயிலின் அருகில் சென்றபோதும் பாஜ தொண்டர்கள் காரை மறித்து முழக்கமிட்டதால் பதற்றம் நிலவியது. பின்னர் பாஜ மாவட்ட தலைவர் கோமதி தொண்டர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். 

இதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனை தொடர்ந்து அபிஷேக் பானர்ஜி சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோவை தனது டிவிட்டரில் பதிவிட்ட பானர்ஜி பாஜ தலைமையின் கீழ் திரிபுராவில் ஜனநாயகம் சிறப்பாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.