பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

17.10.2021 03:00:00

பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தினால், போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களின் உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் எல்.மல்ஸ்ரீ டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் தமக்கான கட்டணத்தை அதிகரிக்கவில்லையென பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடும் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மாணவர்களின் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.