உணவகத்துக்கு சீல்!

24.09.2024 08:12:09

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையம் ஒன்றிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , 15 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 40,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

   

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவு கையாளும் நிலையங்களில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது, உரிய முறையில் குளிர்சான பெட்டியை பேணத் தவறியமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, மருத்துவ சான்றிதழ் கொண்டிராமை, சுகாதார முறைப்படி உணவு கையாளும் இடப்பரப்பினை பேண தவறியமை, உபகரணங்களை உரிய முறையில் பேண தவறியமை போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக உரிமையாளர்களுக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது 15 உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று, உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 40,000 ரூபா அபராதம் விதித்தது.

அதேவேளை, ஒரு உரிமையாளரின் உணவகத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.