உலக சாதனை படைத்த 2 வயது குழந்தை.

20.05.2025 08:29:27

மட்டக்களப்பு கொம்மாந்துறையைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்களேயான கிஷன்ராஜ் தன்யஸ்ரீ, 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கூறி, சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்வு கடந்த சனிக்கிழமை (மே 17, 2025) மக்கள் உதவிகள் மக்கள் பவுண்டேசனின் அனுசரணையுடன், மட்டக்களப்பு கிறீன் காடின் ஹோட்டலில் நடைபெற்றது. சோழன் உலக சாதனை புத்தகத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் கதிரவன் ரி. இன்பராசா தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டு மாநகரசபை ஆணையாளர் நா. தனஞ்சயன் கலந்துகொண்டார். மேலும், செங்கலடி மத்திய மகா வித்தியாலய அதிபர் க. சிவயேஸ்வரன், கல்குடா ஆசிரியர் ஆலோசகர் சுகந்தி நிறஞ்சன், மற்றும் சோழன் உலக சாதனை புத்தக அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

நிகழ்வின்போது, கிஷன்ராஜ் தன்யஸ்ரீ 195 நாடுகளின் தலைநகரப் பெயர்களை மிகக் குறைந்த நேரத்தில் துல்லியமாகக் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். இந்தச் சாதனையைப் புரிந்த குழந்தைக்கு பதக்கங்கள், வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, அதிதிகள் கௌரவித்தனர்.