கன்னியாவில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கட்டுமானம்.
பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (22) திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக மதம் சார்ந்த புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், நேற்று (22) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கவலை வெளியிட்டார்.
அவர் உரையாற்றுகையில், கன்னியா பகுதியில் நேற்று காலை தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையில் புதிய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளரை நேரடியாகத் தொடர்புகொண்டு விளக்கம் பெற முயற்சித்ததாகவும், அண்மையில் அவரை நேரில் சந்தித்து ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், கன்னியா பகுதி தொடர்பாக 2020 ஆம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அந்தப் பகுதியில் எந்தவொரு மதம் சார்ந்த புதிய கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் இணைந்து மதம் சார்ந்த கட்டுமானப் பணிகளை ஆரம்பித்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கும் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும் முரணான செயற்பாடாகக் கருதப்பட வேண்டியதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கைகள் நீதிமன்றத் தீர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய இரா. சாணக்கியன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இதுகுறித்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், பேச்சுவார்த்தை மற்றும் சட்டபூர்வமான வழிமுறைகள் ஊடாக இனங்களுக்கிடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழலில், கன்னியா பகுதியில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்படுவதும், சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுவதும் அனைத்து அரச நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி, குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு காணப்படுமாயின் அதனை அரசாங்கம் நிச்சயமாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றார்.
தற்போதைய நிலையில் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்கள் தமக்குக் கிடைக்கவில்லை என்பதால் உடனடியாக விரிவான பதிலை வழங்க முடியாது என தெரிவித்த அவர், தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் முன்கூட்டியே சந்தேகம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, நீதிமன்றத் தீர்ப்புகளும் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் விதிகளும் மதிக்கப்படும் வகையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்டத்திற்கு அமைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
கன்னியா பகுதி தொடர்பான இந்த விவகாரம் மீண்டும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத் தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, அரச நிறுவனங்கள் அவற்றை முழுமையாகப் பின்பற்றுகிறதா என்பதற்கான கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.