பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு !

10.11.2022 08:02:00

இங்கிலாந்தின் ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அந்நாட்டு பிரதமராக பதவியேற்றார். பொருளாதார சிக்கலில் இருந்து நாட்டை விடுவிக்க போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே, எந்த துறைகளும் ஒதுக்கப்படாத இணை மந்திரி காவின் வில்லியம்சன், சக எம்.பி., ஒருவரை துன்புறுத்தும் வகையில், மொபைல் போனில் செய்திகள் அனுப்பியதாக புகார் எழுந்தது. ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் சில மூத்த அதிகாரிகளும் புகார் தெரிவித்தனர். சில பிரச்னைகளால் ஏற்கனவே இரண்டு முறை மந்திரி பதவியில் இருந்து விலகியவர் காவின் வில்லியம்சன். அவர் மந்திரியாக நியமிக்கப்பட்டபோதே சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், தன் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக காவின் வில்லியம்சன் அறிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க போதிய ஒத்துழைப்பு அளிப்பேன். என்னால் இந்த அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதை தடுக்கும் வகையிலேயே பதவியை ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்தார்.