இறந்தவரின் உடல் மூலம் கொரோனா தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

26.05.2021 13:34:13

கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் சுதீர் குப்தா மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் உடல்களை வைத்து ஆய்வு நடத்தி வந்தோம்.

ஏறக்குறைய 100 உடல்களை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்தோம். உயிர் பிரிந்த 12 – 24 மணி நேரத்தில் இதைச்செய்தோம்.

இதன் முடிவுகளின்படி இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் ஒருவரது உடலில் குறிப்பாக மூக்கு மற்றும் வாய் குழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

எனவே ஒருவர் இறந்து 12 முதல் 24 மணி நேரமான பின்னர், அவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.