தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா?

12.03.2026 11:48:17

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதிமுக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு நடைபெறவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதற்காக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தள்ளிப்போகிறதா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிலும் தவெக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேச்சு எழுந்த நிலையில், இந்த பரபரப்புகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சு நடப்பதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்க தயாராக இருப்பதாக பாஜக கூறியதாகவும் கடந்த சில தினங்களாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கிற விஜய்யின் தவெக, தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று கூறியிருந்தது. கூட்டணிக் கதவுகளை திறந்து வைத்து காத்திருந்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. மலை போல நம்பிய காங்கிரஸ் கட்சியும் தவெகவை காட்டி திமுகவுட பேர வலிமையை காட்டியதே தவிர தவெக பக்கம் வரவில்லை.

இதனால், தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு விஜய் தள்ளப்பட்டார். வரும் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக விஜய்யை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பேச்சு நடப்பதாக வெளியான தகவல் அதிக கவனம் பெற்றது. தவெக தரப்பில் இதனை மறுத்தாலும் பாஜக தரப்பில் பட்டும் படாமலே பதிலளித்தனர். இதனால் ஒருவேளை கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியாகும் தகவல் உண்மைதானோ என்ற ஐயப்படும் அளவிற்கு கடந்த சில நாட்களாக பேச்சு பலமாக அடிபட்டது.

விஜய்யும் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் கடும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்கும் நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அடுத்தடுத்த நெருக்கடிகளுக்கு இடையேதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய இருப்பதாக பரபரப்பாக அரசியல வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. விஜய் வந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெறும் என்றும் திமுக கூட்டணிக்கு மிகப்பெரும் சவாலாக இது இருக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

எடப்பாடி பழனிசாமி பதில் இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவதாக தகவல் பரவுகிறதே? என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, நீங்கள்தான் இப்படி பரப்புகிறீர்கள். நீங்களாக ஒரு கற்பனை செய்து கொண்டு பரப்பினால் நாங்கள் என்ன செய்ய முடியும். அப்படி எதுவும் இல்லை. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நடத்துவீர்களா? என்று கேட்கிறீர்கள். கற்பனையான கேள்வியை கேட்க கூடாது. அது தான் இல்லை என்று சொல்லிவிட்டேன்" என்றார்.