சுதந்திர ஊடகத்தை பாதுகாக்க வேண்டும் .
ஜனநாயக நாடொன்றில் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை என மூன்று முக்கிய தூண்கள் காணப்படுவதுடன், இதற்கு மேலதிகமாக சுதந்திர ஊடகமும் மற்றுமொரு தூணாக விளங்குவதால், அது அரசியலமைப்பில் குறிப்பிடப்படாவிட்டாலும் அதனைப் பாதுகாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை செயலகத்தில் தாபிக்கப்பட்டுள்ள மாண்புமிகு டி.எஸ். சேனநாயக்க அரசியல் பீடத்தில் இன்று (11) நடைபெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கி பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழித்துள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றை நீக்குவோம் என்று இவர்கள் ஏலவே கூறினாலும், அவை இன்னும் நடைமுறையில் இருப்பதோடு, தற்போது பாராளுமன்றத்தில் பேசும் சுதந்திரம் கூட மீறப்பட்டு வருகின்றன.
இன்று விவசாயிகள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகள் குறித்து பேசுவதற்குக் கூட சுதந்திரம் இல்லை. தேர்தல் காலத்தில் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவோம் என பிரஸ்தாபித்தனர். இன்று அது 120 ரூபாவிற்கும் குறைந்த மட்டத்திற்கு வந்துள்ளது.
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், விவசாயிகளின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இன்று விவசாயிக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்னு எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேச முடியாத நிலை.
உண்மையை விட அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதே நோக்கமாகக் கொண்டு, விவசாயிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், இன்று பாராளுமன்றத்தில் விவசாயிகளின் துயரத்தைக் கூறுவதற்கு எதிர்க்கட்சிக்கு காணப்படும் உரிமையை மறுத்து வருகின்றது. இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தின் பாதையிலேயே பயணித்து, 2023 ஆம் ஆண்டைப் போலவே இன்றும் பாராளுமன்றக் குழுக்களில் பேசுவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும் தடை விதித்துள்ளது.
இந்த அரசாங்கத்திற்கும் கடந்த அரசாங்கத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
விதை, உரம், விவசாய இரசாயனப் பிரச்சினைகள் மற்றும் மனித-யானை மோதல் போன்ற விடயங்கள் குறித்துப் பேசுவதற்கு உரிமை இல்லாது நிலை இன்று எழுந்து காணப்படுகின்றது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கோ அல்லது அது குறித்துப் பேசுவதற்கோ உள்ள உரிமை பறிக்கப்பட்டுள்ளன.
இந்த அரசாங்கத்திற்கும் கடந்த அரசாங்கத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாமல் போனதே இதற்குக் காரணமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சலுகைகள் பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 52% பங்களிப்பை நல்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முனைவோரின் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான 'பராட்டே சட்டத்தை' தேர்தல் இலக்குகளுக்காக மட்டுமே இந்த அரசாங்கமும் கடந்த அரசாங்கமும் தற்காலிகமாக இரத்து செய்து வந்தன. இதனால் அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படவில்லை.
இந்த தொழில்முனைவோருக்கு கட்டுப்படியாகக்கூடிய செலவில் மூலதனத்திற்கான அணுகலை பெற்றுக் கொடுக்க வேண்டும். என்றாலும் அது வழங்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் இதை வழங்கவில்லை. இந்த வசதிகளும் சலுகைகளும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு கிடைக்காமல் பெரும் கோடீஸ்வரர்களுக்கே கிடைக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினருக்கும், கிராமப்புற மக்களுக்கும், தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த சலுகைகள் கிடைத்தபாடில்லை.
அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கிறது.
இந்த அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றது. இவர்கள் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, சுதந்திர ஊடகம் மட்டுமன்றி சிவில் சமூகத்தையும் அழித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர முயற்சிக்கின்றது. இது மிகவும் ஆபத்தான ஒரு நிலைமையாகும்.
நீதித்துறையின் சுதந்திரத்திற்காக நாம் போராடுவோம்.
தற்போது உயர் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பாமல், நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது நீதித்துறைக்கு விடுக்கப்படும் பெரும் அழுத்தமாகும். இதற்கு எதிராக எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும்.
நாம் சரியான பாதையிலேயே பயணிக்கிறோம்.
ஐக்கிய மக்கள் சக்தியிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், நாம் சரியான பாதையிலேயே பயணிக்கிறோம். நாட்டை கட்டியெழுப்பும் சரியான பாதை ஐக்கிய மக்கள் சக்தியிடமே காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.