இந்திரா காந்தியின் 38வது நினைவு தினம்

31.10.2022 10:37:35

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்பு இரண்டையும் என் இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் இந்தியாவுக்காக உங்கள் உயிரை தியாகம் செய்தீர்கள், இந்தியாவை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தில் அவருக்கு எனது மரியாதைகள். விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவ பலம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பற்றது" என்று கூறினார்.