பணி முடிந்து செல்லும் சுவிஸ் தூதுவருடன் தமிழரசு கட்சி சந்திப்பு!

12.07.2026 15:10:01

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் ஓய்வு பெறவுள்ள தூதுவரை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமணிக்கம், ப.சத்தியலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

    

 

இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் தனது பணிக்காலத்தில் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அவருக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரம், மனிதாபிமானத் தேவைகள், நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் நிலையான சமாதானத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் அவர் வழங்கிய ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தனர்.

அதேபோன்று, தமிழ் அரசியல் கட்சிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, தமிழர் மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்களை கவனத்துடன் செவிமடுத்துஇ அவற்றை சர்வதேச மட்டத்தில் புரிந்துகொள்வதற்கான சூழலை உருவாக்க அவர் மேற்கொண்ட பங்களிப்பையும் பாராட்டினர்.

மேலும்,மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய விடயங்களில் சுவிட்சர்லாந்து தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவிற்கும் எமது நன்றியை தெரிவித்தனர்.

அத்துடன், எதிர்காலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அரசியல் தீர்வை நோக்கிய முயற்சிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் அக்கறையும் அவசியம் என்பதையும் வலியுறுத்தினோம்.

இறுதியாக, தனது எதிர்காலப் பணிகளிலும் தனிப்பட்ட வாழ்விலும் அனைத்து வெற்றிகளும் நலன்களும் கிட்ட எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்குமிடையிலான நட்புறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற எமது விருப்பத்தையும் பகிர்ந்துகொண்டனர்.